கடலூர் பெரியார் அரசுக் கல்லூரியில் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்புத் துறை மூலமாக மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ப.குமரன் தலைமை வகித்து, பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்தார்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் பாலமுருகன் பங்கேற்று பேசுகையில், போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எவ்வாறு எதிர்கொள்வது என்று விளக்கினார். நிகழ்வில், 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்தப் பயிற்சி வகுப்பு கல்லூரி வளாகத்தில் தினமும் நடைபெறுகிறது. இதில், விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, புள்ளியியல் துறைத் தலைவர் சுசி கணேஷ்குமார் வரவேற்று பேசினார்.