பண்ருட்டியில் 22 மி.மீ. மழை வெள்ளிக்கிழமை பதிவானது.
தென்மேற்குப் பருவ மழை, வெப்பச் சலனம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன்படி, கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை இரவு கடலூர் நகரிலும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக பண்ருட்டியில் 22 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: குடிதாங்கி 12.50, வானமாதேவி 7, விருத்தாசலம் 5, கடலூர் 2.80, குப்பநத்தம் 2.2, பெலாந்துரை 1.20 என்ற அளவில் மழை பதிவானது.
மழை காரணமாக, கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. பகலில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவாக உணரப்பட்டது.