கடலூரில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தியும், நீர்நிலைகளை பராமரிக்கும் வகையிலும் மத்திய அரசு ஜல் சக்தி அபியான் என்ற திட்டத்தை தொடக்கியுள்ளது.
இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, எதிர்வரும் மழைக் காலத்துக்குள் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி, கடலூர் உண்ணாமலைசெட்டிச்சாவடியில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கொடியசைத்து தொடக்கிவைத்தார். இந்த நிகழ்வில், சுமார் 500 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, மழைநீர் சேகரிப்பு, பாரம்பரிய நீர்நிலைகளை பாதுகாத்தல், மரக்கன்றுகள் நடுதல், நிலத்தடி நீரை பெருக்குதல் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், முழக்கமிட்டும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியபடி சென்றனர்.
பேரணியில், கடலூர் ஊராட்சி ஒன்றிய செயற்பொறியாளர் செந்தில்நாதன், தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆர்.எஸ்.வேலுமணி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.