திருக்கோயில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தல்
திருக்கோயில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியது.
இந்தச் சங்கத்தின் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற மண்டல பொதுக் குழுக் கூட்டம், வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய வளாகம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, விழுப்புரம் மண்டலத் தலைவர் அ.அழகிரி (எ) பேராதரன் தலைமை வகித்தார். மாநில இணை பொதுச் செயலர் கி.ஐயப்பன், மண்டலச் செயலர் கே.பார்த்தசாரதி, கடலூர் துணைத் தலைவர் பொ.கண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் சு.வாசு, கே.ராஜ்குமார், கே.கே.வி.ஏழுமலை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்க ஆலோசகர் வி.ஆழ்வார் வரவேற்றார்.
வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய கணக்கர் பெ.ஞானபிரகாசம், எழுத்தர் வீ.வீராசாமி, கோ.பாரதி, ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயில் கணக்கர் பி.வீரராகவன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். மாநிலத் தலைவர் ஏ.தேவராசன், பொதுச் செயலர் வி.கண்ணன், பொருளாளர் க.ரமேஷ்குமார், துணைத் தலைவர் மு.பக்கிரிசாமி, இணைப் பொதுச் செயலர் அ.முத்துசாமி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயில் மேலாளர் பா.குருநாதன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
கூட்டத்தில், கோயில்களில் பணிபுரியும் தகுதியுள்ள அர்ச்சகர், பூசாரி மற்றும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது மற்றும் பணி வரன்முறை செய்திட தலைமை சங்கம் மூலம் ஆணையரிடம் முறையிடுவது, 110 விதியின் கீழ் 5 ஆண்டுகள் பணிமுடித்த தற்காலிக மற்றும் தொகுப்பூதியப் பணியாளர்களை 2015-ஆம் ஆண்டில் பணி நிரந்தரம் செய்ததுபோல எஞ்சிய அனைத்துப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய தலைமை சங்கம் மூலம் துறை அமைச்சரை அணுகி சட்டப் பேரவையில் அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், காலிப் பணியிடங்களை அடுத்த நிலையில் உள்ள தகுதியான நபர்களுக்கு பதவி உயர்வு அளித்து நிரப்பிட வேண்டுதல், துறை உத்தரவின்படி ஊதிய உயர்வு, அகவிலைப்படி, ஓய்வூதியம், பணிக்கொடை, குடும்ப நல நிதி வழங்கப்படாமல் பாதிக்கப்பட்டுள்ள கோயில் பணியாளர்களுக்கு உடனடியாக உரிய பலன்களை பெற்றுத்தர வேண்டும் என வலியுறித்தப்பட்டது. கடலூர் செயற்குழு உறுப்பினர் க.மலையப்பன் நன்றி கூறினார்.