கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே பெண்ணின் உடல் பாகங்கள் எரிந்த நிலையில் சனிக்கிழமை மீட்கப்பட்டன.
விருத்தாசலம் அருகே உள்ள கிழக்கிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்குச் சொந்தமான முந்திரிக் காடு, காட்டுக்கூடலூர் - விருத்தாசலம் சாலையில் அமைந்துள்ள இருப்பு கிராமத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் கடந்த 2 நாள்களாக மழை பெய்ததை தொடர்ந்து, செல்வராஜ் உழவுப் பணிக்காக முந்திரிக் காட்டுக்கு சனிக்கிழமை சென்றார். அப்போது, அங்கு பெண்ணின் தலை, மார்பு பகுதிகள் மட்டும் எரிந்த நிலையில் தனித் தனியாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அளித்தப் புகாரின்பேரில் நெய்வேலி டிஎஸ்பி லோகநாதன் மற்றும் ஊ.மங்கலம் போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் உதவி இயக்குநர் தாரா நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் உடல் பாகங்களை போலீஸார் மீட்டு ஆய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பெண் யார் என்ற விவரம்
தெரியவில்லை. இதுகுறித்து ஊ.மங்கலம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.