கர்நாடக அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய காவிரி நீரை திறந்துவிடக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைமை தபால் நிலைய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பி.கற்பனைச்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் சதானந்தம், துணைச் செயலர் மூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைச் செயலர் சாமி நடராஜன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், கர்நாடக அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய 9.1 டிஎம்சி தண்ணீரை திறக்க மறுப்பதைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரிய உத்தரவை அமல்படுத்தவும் கோரி முழக்கமிட்டனர். மாவட்ட பொருளாளர் செல்லையா, புவனகிரி ஒன்றியச் செயலர் காளி, கோவிந்தராஜன், கீரப்பாளையம் ஒன்றியச் செயலர் சிவராமன், பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலர் செல்வம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.