கடலூரில் பலகாரக் கடையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் தனியார் இனிப்புக் கடை உள்ளது. இந்தக் கடைக்கு தேவையான கேக், இனிப்பு, கார வகைகள் அனைத்தும் எதிரே உள்ள அவர்களுக்கு சொந்தமான கட்டடத்தில் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலையில் அந்தக் கட்டடத்தின் 4-ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. கேக், இனிப்புகள் செய்யப்படும் சமையல் கூடத்தில் அட்டை பெட்டிகள், காலி எண்ணெய் மற்றும் டால்டா டப்பாக்கள் இருந்த பகுதியில் தீப்பிடித்து மள மளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அங்கு பணியில் இருந்தவர்கள் உடனடியாக தப்பி ஓடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறை கோட்ட அலுவலர் செந்தில்குமார் தலைமையில் 2 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின் கசிவால் தீ விபத்து நேரிட்டதாகவும், சேத மதிப்பு ரூ.25 ஆயிரம் என்றும் தீயணைப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து திருப்பாதிரிபுலியூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.