வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில், விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
விருத்தாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சி ஜே.ஜே நகர் மற்றும் நேமம் ஆதிதிராவிட இன மக்களுக்கு கடந்த 15 ஆண்டுக்கு முன்பு தமிழக அரசால் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. தற்போது, கிராமத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ளதால், அதற்கேற்ற வகையில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களிடம் மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
எனவே, அலுவலர்களைக் கண்டித்தும், உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு அந்தக் கட்சியின் கிளைச் செயலர் வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் எம்.சேகர், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் முருகையன், சுப்பிரமணியன், ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, விருத்தாசலம் சார்- ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.