நெகிழிக் குப்பைகள் தீ வைத்து எரிப்பு: சுவாசக் கோளாறால் பொதுமக்கள் அவதி

பண்ருட்டி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்பட்டு, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பிரித்தெடுக்கப்படும் பயன்படுத்த முடியாத உலர் நெகிழிக் (பிளாஸ்டிக்) கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுவதால், பொதுமக்கள்


பண்ருட்டி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்பட்டு, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பிரித்தெடுக்கப்படும் பயன்படுத்த முடியாத உலர் நெகிழிக் (பிளாஸ்டிக்) கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுவதால், பொதுமக்கள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாகி அவதியடைந்து வருகின்றனர்.
பண்ருட்டி நகராட்சியில் 33 வார்டுகளில் சுமார் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர். நகராட்சி பகுதியில் துப்புரவுப் பணியில் 110 நிரந்தரத் தொழிலாளர்களும், 97 ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
பண்ருட்டி நகரப் பகுதியில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 17 டன் குப்பைக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இதில், சுமார் 9 டன் மக்கும் குப்பை. ஐந்தரை டன் குப்பை உரமாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 
ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள் விற்பனை செய்யப்பட்டு துப்புரவுப் தொழிலாளர்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது. இதில், சுமார் 4 டன் குப்பைக் கழிவுகள் பயன்படுத்த முடியாத உலர் பிளாஸ்டிக் கழிவுகள். 
இந்த உலர் பிளாஸ்டிக் கழிவுகளை அரியலூரில் உள்ள சிமென்ட் கம்பெனி இலவசமாகப் பெற்றுச் சென்றது. இதனால், நகர சுகாதாரத் துறைக்கு பெரும் சுமை குறைந்தது. இந்த நிலையில், கடந்த 7 மாதங்களாக சிமென்ட் கம்பெனி குப்பைகளை எடுத்துச் செல்லவில்லையாம்.
இதனால், நகராட்சி அலுவலகத்தின் பின்புறம், மணி நகர் நுண்ணுயிர் உரமாக்கும் மையம், திருவதிகை மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி ஆகிய இடங்களில் சுமார் 40 டன் அளவிலான எதற்கும் பயன்படுத்த முடியாத உலர் பிளாஸ்டிக் கழிவுகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன.
இந்த நிலையில், இந்தக் கழிவுகளை நகராட்சி நிர்வாகம் கெடிலம் நதிக்கரையோரம் கொட்டி தீயிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 
இதனால், அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமும், துர்நாற்றமும் வீசுகிறதாம். 
குப்பை எரிக்கப்படும் இடத்தைச் சுற்றிலும் வட்டாட்சியர் அலுவலகம், வணிக வரித் துறை அலுவலகம்,  போக்குவரத்துக் கழகப் பணிமனை, குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இதனால், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலர் டி.சக்திவேல் கூறியதாவது:
எதற்கும் பயன்படாத உலர் பிளாஸ்டிக் குப்பைகள் மலை போல 3 இடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. 
இடப் பற்றாக்குறையைப் போக்கவும், வாகனத்தில் அதிக அளவில் ஏற்றிச் செல்லும் வகையிலும் இயந்திரத்தின் உதவியுடன் அவற்றை கேக் வடிவில் மாற்றி அடுக்கி வைத்துள்ளோம்.
ஒரு வில்லையின் எடை 30 முதல் 35 கிலோ வரை இருக்கும். மற்றபடி இந்தக் கழிவுகளை எரிக்கவில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com