கடலூர் வடக்கு மாவட்ட மதிமுகவின் செயற்குழுக் கூட்டம் அதன் மாவட்ட அவைத் தலைவர் கோ.காமராஜ் தலைமையில் கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ஜெ.ராமலிங்கம், உயர்நிலைக் குழு உறுப்பினர் மு.செந்திலதிபன், அமைப்புச் செயலர் ஆ.வந்தியதேவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், கட்சியின் 26- ஆவது ஆண்டு தொடக்க விழாவை ஜூன் மாதம் முழுவதும் கொண்டாடுவது. தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பது. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக வட கிழக்கு பருவமழை பொய்த்ததால், கடலூர் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
காவிரி பாசனத்தைப் பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும். கடலூர் பகுதியில் அதிகளவில் பன்றிகள் வளர்க்கப்படுவதால், நகரப் பகுதியில் அதிகமாக அசுத்தமாகிறது. மேலும், பன்றிகளால் பல்வேறு நோய்களும் பரவுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் கோ.செளந்தரராஜன், ஏ.கே.சேகர், இரா.மணவாளன், ஆர்.பரமமூர்த்தி, கோ.அய்யாவு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, கட்சியின் நகரச் செயலர் கோ.பா.ராமசாமி வரவேற்றார். ஒன்றியச் செயலர் இரா.அண்ணாதுரை நன்றி கூறினார்.