நெய்வேலி அருகே முகநூலில் அவதூறு பதிவால் கல்லூரி மாணவி உள்பட இருவர் தற்கொலை செய்த வழக்கில், தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம், மந்தாரக்குப்பம் அருகே உள்ள குறவன்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மகள் ராதிகா (19), கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.
அதே பகுதியில் வசிக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் பிரேம்குமார் (20). இவர் முகநூலில் ஆபாசமாக பதிவிட்டதால் எழுந்த பிரச்னை காரணமாக ராதிகா திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதையறிந்த, ராதிகாவின் அத்தை மகனும், காதலருமான வடலூர் பார்வதிபுரத்தைச் சேர்ந்த சேகர் மகன் விக்னேஷ் (23) வீனங்கேணியை அடுத்துள்ள செங்கால்பாளையத்தில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
இதையடுத்து, குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மந்தாரக்குப்பம் காவல் நிலையம் அருகே திங்கள்கிழமை இரவு மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த நிலையில், கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பிரேம்குமார் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார். மேலும், மந்தாரக்குப்பம் போலீஸார் பிரேம்குமாரின் தந்தை பன்னீர்செல்வம், உறவினரான வல்லரசு ஆகியோரை கைது செய்து நெய்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, பன்னீர்செல்வம் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பிரேம்குமார், வல்லரசு ஆகியோர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.