காடாம்புலியூரில் கோயில் கட்டுவதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக ஒரு தரப்பினர் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூர், கல்லாங்குளம் பகுதியில் அய்யனார் கோயில் கட்டுவது தொடர்பாக நடுத்தெரு, கிழக்கு தெரு, மேற்கு தெருவைச் சேர்ந்த தரப்பினருக்கும், தெற்கு தெருவைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. இதுதொடர்பாக கடந்த 15.12.2018 அன்று பண்ருட்டி வட்டாட்சியர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில், 6.3.2019 அன்று வட்டாட்சியர் தரப்பில், தெற்கு தெருவைச் சேர்ந்தவர்களின் குலதெய்வ கோயில் எனக்கூறி அவர்களை கோயில் கட்டிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டதாம்.
இந்த நிலையில், மேற்கூறிய 3 தெருக்களை சேர்ந்தவர்களும் கோயில் கட்ட எதிர்ப்புத் தெரிவித்து, காடாம்புலியூர் காவல் நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் கோ.நாகராஜன் மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்களை காடாம்புலியூர் காவல் நிலையத்துக்கு அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
கோரிக்கை தொடர்பாக வட்டாட்சியரிடம் தெரிவித்து தீர்வு காணும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.