வறட்சியின் காரணமாக வனப் பகுதியில் தண்ணீர் இல்லாததால், ஊருக்குள் புகுந்து உயிரிழக்கும் மான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் வேப்பூரை அடுத்த அடரி, சிறுபாக்கம், ராமநத்தம் பகுதிகள் கிருஷ்ணாபுரம் காப்புக் காட்டுக்கு உள்பட்ட பகுதிகளாகும்.
இங்கு, அதிகளவில் மான் இனங்கள், குரங்குகள், காட்டுப் பன்றிகள், நரி, மயில் போன்ற வன உயிரினங்கள் வசித்து வருகின்றன. வனப் பகுதியில் செய்யப்படும் ஆக்கிரமிப்புகளால் அங்குள்ள குட்டைகளுக்குச் செல்லும் வழிகள் அடைக்கப்படுகின்றன.
இதனால், மழைக் காலத்தில் வனப் பகுதியிலுள்ள குட்டைகள் நிரம்பாமல் கோடைக்காலத்தில் விலங்குகளுக்கு கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பகிறது.
எனவே, கோடை காலங்களில் வன விலங்குகள் குடிநீர் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதும், அவற்றை நாய்கள் வேட்டையாடுவதும், மனிதர்களால் பாதிப்பு ஏற்பட்டு இறப்பதும் தொடர்கிறது.
இந்த நிலையில், தண்ணீர் தேடி செவ்வாய்க்கிழமை ராமநத்தம் கிராமத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த ஒரு வயது புள்ளி மான் நாய்கள் கடித்ததில் உயிரிழந்தது. இதையடுத்து மானின் சடலம் உடல்கூறாய்வு செய்யப்பட்டு நாங்கூர் வனப் பகுதியில் புதைக்கப்பட்டது.
தண்ணீர் தேடி செல்லும் போதும், சாலையைக் கடக்கும்போது வாகனத்தில் சிக்கியும் வன விலங்குகள் உயிரிழப்பது தொடர்கிறது. கடந்த 6 மாதங்களில் கடலூர் மாவட்டத்தில் இதுபோல 13 மான்கள் உயிரிழந்துள்ளதாக வனத் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இதுதவிர, வேட்டையாடுபவர்களாலும் மான்கள் இறப்பதாக வன விலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, வன விலங்குகளின் குடிநீர் ஆதாரத்துக்கு போதுமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.