பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடியில் மின்சாரம் பாய்ந்ததில் யானை இறந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக் கோட்டம், சேரம்பாடி வனச் சரகத்துக்கு உள்பட்ட கோரஞ்சால் பகுதியிலுள்ள தனியார் தேயிலைத் தோட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த காட்டு யானை, தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியைத் தும்பிக்கையால் தொட்டதில் மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தது. தகவலறிந்த வனத் துறையினர் அப்பகுதியை ஆய்வு செய்தனர். ஓவேலி கால்நடை மருத்துவர் எம்.பாரத்ஜோதி தலைமையிலான மருத்துவக் குழுவினர் யானையை பிரேதப் பரிசோதனை செய்து அதே இடத்தில் புதைத்தனர். இறந்தது சுமார் 15 வயதுடைய ஆண் யானை என்றும் உடலிலுள்ள முக்கிய உறுப்புகள் ஆய்வகப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் வனத் துறையினர் தெரிவித்தனர்.