பொது இடத்தில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவர்களுக்கு போலீஸார் பாராட்டு தெரிவித்தனர்.
கடலூர் புதுநகரைச் சேர்ந்தவர் த.முருகன் (40), கட்டட தொழிலாளி. இவர், அண்மையில் கடலூர் கூத்தப்பாக்கம் கான்வென்ட் பேருந்து நிறுத்தம் அருகே கேட்பாரற்று கிடந்த கைப்பையை எடுத்துப் பார்த்தார். அதில், ரூ.69,850 ரொக்கம் இருந்தது தெரியவந்தது. அவர் உடனடியாக அந்தப் பணத்தை திருப்பாதிரிபுலியூர் காவல் நிலைய ஆய்வாளர் அ.குமாரய்யாவிடம் ஒப்படைத்தார். போலீஸார் உரிய முறையில் விசாரணை நடத்தி, பணத்தை தவற விட்ட கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த கே. குழந்தைசாமியிடம் அதை திரும்ப ஒப்படைத்தார். பின்னர், முருகனின் நேர்மையை பாராட்டி அவரை போலீஸார் கௌரவித்தனர்.
ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை: கடலூர் வண்டிப்பாளையம் ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வருபவர் திருப்பாதிரிபுலியூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ரா.சந்திரபாபு (59). இவர், ஆட்டோ நிறுத்தத்தில் பயணி தவற விடப்பட்ட ரூ.5 ஆயிரத்தை திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்தப் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த போலீஸார், சந்திரபாபுவை பாராட்டி கெளரவித்தனர்.