பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கக் கோரி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
போராட்டத்துக்கு, சங்கத்தின் ஒன்றியத் தலைவர் வி.ஜெயராமன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் எம்.அஞ்சலை, ஒன்றிய துணைச் செயலர் எம்.சிவசக்தி, துணைத் தலைவர் கே.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ், மாநில துணைத் தலைவர் எம்.சின்னதுரை ஆகியோர் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் எம்.பி.தண்டபாணி, விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் ஒன்றியச் செயலர் ஏ.வாசு, சிறுபான்மை நலக்குழு எஸ்.எஸ்.ராஜட், மாதர் சங்கம் சார்பில் ஆர்.சிவகாமி, கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் எம்.மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
போராட்டத்தில், தமிழகம் முழுவதும் தற்போது நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு பிரச்னையைக் கண்டித்து முழக்கமிட்டனர். மேலும், இந்தப் பிரச்னையை தீர்த்து பொதுமக்களுக்கு தடையின்றி தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுதவிர, நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து சட்டக் கூலியாக ரூ.229 வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கமிட்டனர். பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலர் அசோக்பாபுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.