காவலர் குடும்பங்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
தமிழக அரசு நேஷனல் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து காவல் துறையினர், அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அளித்து வருகிறது. இந்தத் திட்டத்தில், மாதச் சம்பளத்தில் ரூ. 180 பிடித்தம் செய்யப்படுகிறது.
இதில், அவர்களது குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் வரையிலான மருத்துவச் செலவுகளை மேற்கொள்ளலாம். திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 7 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும்.
கடலூர் மாவட்டத்தில் இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் ஆய்வு செய்தார். காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் காப்பீட்டு நிறுவன மண்டல மேலாளர் மோகன்குமார், மருத்துவமனை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, காப்பீட்டுத் திட்டத்தில் குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து நோய்களுக்கும் சிகிச்சைப் பெறும் வகையில் திட்டத்தைத் திருத்துவதற்கு காப்பீட்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டார்.
மேலும், ஓய்வு பெற்ற காவலர்கள் புதிய மருத்துவக் காப்பீட்டு அட்டை, காவலர் பல்பொருள் அங்காடி அடையாள அட்டை பெற காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் நிறை வாழ்வு பயிற்சி மையத்தை அணுகலாம் என்றும், 94981 54170 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
நிறை வாழ்வு பயிற்சி மைய ஆய்வாளர்கள் தீபா, பாண்டிச்செல்வி, காவல் உதவி ஆய்வாளர்கள், காவல் நிலைய எழுத்தர்கள் கலந்து கொண்டனர்.