பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களவைத் தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பண்ருட்டி வட்டாட்சியர் கீதா தலைமை வகித்தார். தேர்தல் உதவி அலுவலர் ராஜஸ்ரீ, நெய்வேலி தேர்தல் உதவி அலுவலர் மங்களநாதன் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை, தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர்.
கூட்டத்தில் துணிக் கடை, பாத்திரக் கடைகளில் டோக்கன் மூலமாக பொருள்களை விநியோகம் செய்யக் கூடாது, திருமண மண்டபங்களில் விருந்து நிகழ்ச்சி, இலவசப் பொருள்களை வழங்குதல் கூடாது, விழா நடத்த அனுமதி அளிக்கக் கூடாது. கடை வீதிகளில் பதாகைகள் வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
அச்சக உரிமையாளர்கள் அதில் தொலைபேசி எண்ணை குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் வருவாய்த் துறை அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள், வணிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.