நிலுவைச் சம்பளத்தை வழங்காத தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தைக் கண்டித்து, வாக்காளர் அட்டைகளைத் திரும்ப ஒப்படைக்க ஆலைத் தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.
திட்டக்குடி வட்டம், பெண்ணாடத்தில் தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் அனைத்துத் தொழில்சங்கங்களின் கூட்டம், அந்த ஆலை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆலையில் பணியாற்றி வரும் 240 தொழிலாளர்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும், 14 மாதங்களாக சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையும் உரிய கணக்குகளில் வரவு வைக்கப்படவில்லை.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத சர்க்கரை ஆலை நிர்வாகம், மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து, மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக முடிவு செய்தனர்.
மேலும், தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் ஏப்ரல் 5 -ஆம் தேதி திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டைகளைத் திரும்ப ஒப்படைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.