தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள கண்காணிப்பு வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு வருகிறது.
மக்களவைத் தேர்தலுக்காக மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் 63 கண்காணிப்புக் குழுக்களை அமைத்துள்ளார். மாவட்டத்தில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில், தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள், 3 நிலைக் கண்காணிப்புக் குழுக்கள், ஒரு விடியோ கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மொத்தமுள்ள 63 வாகனங்களைக் கண்காணிக்கும் வகையில், அந்த வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் வாகனம் எந்தப் பகுதியில் உள்ளது என்பதை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையிலிருந்தே கண்காணிக்க முடியும்.
மேலும், சென்னையிலுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகம், புணேயில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் மூலமும் கண்காணிக்க முடியும்.
தேர்தல் தொடர்பான புகார்கள், சந்தேகங்களைத் தெரிந்து கொள்வதற்கு இலவச தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எண்கள் கட்டுப்பாட்டு அறையில் கையாளப்படுவதால், தேவைப்படும் வாகனங்களின் இருப்பிடத்தைத் தெரிந்து கொண்டு அதற்கேற்பவும் உத்தரவிடும் வகையில் இந்த ஜிபிஎஸ் கருவி பயன்படும் என்று கூறப்படுகிறது.