தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் ஒன்றாக காவல் நிலைய எல்லைகளின் வரைபடத்தைத் தயாரிக்கும் பணியில் மாவட்டக் காவல் துறை ஈடுபட்டுள்ளது.
கடந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் காவல் நிலைய எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டன. கடலூர் புதுநகர், விருத்தாசலம், சிதம்பரம் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களின் காவல் நிலைய எல்லைகளும், புறநகர்களில் உள்ள எல்லைப் பகுதிகளும் மாற்றியமைக்கப்பட்டன. பெரும்பாலான காவல் நிலையங்களின் எல்லைகள் இவ்வாறு மாறுதலுக்கு உள்ளாகியுள்ளன.
இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள 46 காவல் நிலையங்களின் எல்லைகளையும், அதில் அமையப் பெற்றுள்ள வாக்குச்சாவடி மையங்கள், தீயணைப்பு நிலையம், மத்திய - மாநில அரசுகளின் முக்கிய அலுவலகங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், போக்குவரத்து கேந்திரங்கள், தகவல் தொடர்பு மையங்கள், மேலும் பதற்றமான பகுதிகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, வரைபடத்தைத் தயாரிக்குமாறு காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் உத்தரவிட்டார்.
அதன் பேரில், அனைத்து காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள், தனிப் பிரிவு தலைமைக் காவலர்கள் ஆகியோர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு, சென்னையிலிருந்து வந்துள்ள வரைபட நிபுணர்களின் உதவியுடன் காவல் நிலைய எல்லைகளின் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.