கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட 2ஆம் நாளான புதன்கிழமையும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்.18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
கடலூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு, தேர்தல் அலுவலகமாக அறிவிக்கப்பட்டிருந்த கடலூர் மாவட்ட ஆட்சியரகம், கடலூர் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் முதல் நாளில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இரண்டாவது நாளான புதன்கிழமையும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
வேட்புமனு தாக்கலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரகம், சார் ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மொத்தம் 272 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் மார்ச் 26 ஆம் தேதி. சனி (மார்ச் 23), ஞாயிற்றுக்கிழமைகளில் (மார்ச் 24) வேட்பு மனு தாக்கல் நடைபெறாது. 27 ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையும், 29 ஆம் தேதி வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும்.