திட்டக்குடி அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத்தியநாத சுவாமி கோயில் பங்குனி உத்திரத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பாடல் பெற்ற பழமைவாய்ந்த இந்தக் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது. 11 ஆம் தேதியன்று கொடியேற்றம், தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, இரவு உற்சவத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது.
விழாவின்முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவிழாபுதன்கிழமை நடைபெற்றது. இதனை முன்னிட்டு, மூன்று தேர்களும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவர்கள் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு திருத்தேரில் எழுந்தருளினர். வைத்தியநாத சுவாமி தனித் தேரிலும், விநாயகர், அசானாம்பிகை அம்மன் ஆகியோர் தனித்தனி தேர்களிலும் வீற்றிருக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், பெண்கள் பக்தி கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
மேளதாளங்களுடன் தேரோடும் வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. இதில், பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.