தேர்தல் பரிசுப்பொருள்களை மண்டபத்தில் அனுமதிக்கக் கூடாது: காவல்துறை கட்டுப்பாடு
தேர்தல் பரிசுப் பொருள்களை திருமண மண்டபங்களில் வைக்க அனுமதிக்கக் கூடாது என அதன் உரிமையாளர்களுக்கு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, திருப்பாதிரிபுலியூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள திருமண மண்டபத்தின் உரிமையாளர்கள், மேலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. காவல் ஆய்வாளர் ஆ.குமாரய்யா தலைமை வகித்தார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது: திருமண மண்டபத்தில் அனைத்துப் பகுதிகளையும், சாலையையும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். தேர்தல் நேரத்தில் வெளியூர்களிலிருந்து வந்து தங்குவோர் விவரத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
மண்டபத்தில் சமையல் செய்து வெளி ஆட்களுக்கு அனுப்புதல், மது மற்றும் இதர பரிசுப் பொருள்களை மண்டபத்தில் வைத்திருந்து விநியோகிக்கும் வகையிலான ஏற்பாடுகளில் ஈடுபடக் கூடாது. தேர்தல் சம்பந்தமாக உள்ளரங்கக் கூட்டம் நடைபெற்றால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
மண்டபத்தில் பேனர் வைப்பதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி தடை விதிக்கப்பட்டிருப்பதை எடுத்துக் கூற வேண்டும். திருமண வயதை எட்டாதவர்களுக்கு திருமணம் செய்து வைக்க மண்டபத்தை அனுமதிக்கக் கூடாது என்றார் அவர். உதவி ஆய்வாளர் ம.கதிரவன் நன்றி கூறினார்.