கடலூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக வந்த இளைஞரை தாக்கிய பெண், அவரது 3 மகள்களை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் ஆஜராவதற்காக பெண்ணாடம் தெற்கு ரத வீதியைச் சேர்ந்த பாபு (32), சேலம் மாவட்டம் சின்னஅம்மாபாளையம் சூரமங்கலத்தைச் சேர்ந்த சாதிக்பாஷா மனைவி ரஷிதுன்னிசா (39) ஆகியோர் தரப்பினர் வந்திருந்தனர்.
இந்த நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ரஷிதுன்னிசாவும் அவர்களது 3 மகள்களும் சேர்ந்து பாபுவை தாக்கினர். இதிலிருந்து தப்பிக்க அவர் நீதிமன்றத்துக்குள் நுழைந்து கொண்டார். இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் பாபுவை மீட்டு கடலூர் அரசு மருத்துமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து அவர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ரகளையில் ஈடுபட்ட ரஷிதுன்னிசா மற்றும் அவரது 3 மகள்களையும் கைது செய்தனர்.