கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் கேட்ட மாற்றுத் திறனாளியை தாக்கிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கடலூரில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அருகேயுள்ள எடசித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அமரேசன், மாற்றுத் திறனாளியான இவர், விவசாயம் செய்து வருகிறார். தனது விவசாயப் பணிகளுக்காக கடன் வாங்க அங்குள்ள கூட்டுறவு கடன் சங்கத்துக்குச் சென்றபோது, அதன் ஊழியர் ஒருவர் அமரேசனை அவமதித்து, தாக்கினாராம். இதுதொடர்பாக, மங்கலம்பேட்டை காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் புகார் அளித்தும் முறையான விசாரணை நடத்தப்படவில்லையாம்.
ஆகவே, மாற்றுத் திறனாளியை தாக்கியவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் லட்சிய முன்னேற்ற சங்கத்தினர் கடலூரில் மாவட்ட பழைய ஆட்சியர் அலுவலகம் அருகில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தலைவர் சி.கே.சந்தோஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலர் பொன்.சண்முகம் கண்டன உரையாற்றினார். பொருளர் ஆர்.தட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் எம்.ஆறுமுகம், எஸ்.ஜெயபாலன், வி.சக்கரை உள்ளிட்டோர் தங்களது ஆடைகளில் கருப்பு வில்லை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.