பாமக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
By DIN | Published On : 28th March 2019 08:57 AM | Last Updated : 28th March 2019 08:57 AM | அ+அ அ- |

திட்டக்குடியில் பாமக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு கடலூர் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் பாமக சார்பில் இரா.கோவிந்தசாமி வேட்பாளராக களமிறங்குகிறார். இதைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, திட்டக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு அதிமுக மேற்கு மாவட்டச் செயலர் ஆ.அருண்மொழிதேவன் தலைமை வகித்துப் பேசியதாவது:
இந்தத் தேர்தல் ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல். கூட்டணி கட்சியினர் நாள்தோறும் வாக்காளர்களை சந்தித்து களப் பணியை முழுமையாகச் செய்ய வேண்டும். சில சமுதாயங்களின் வாக்குகள் பாமகவுக்கு இல்லை என்ற பொய்ப் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும். பாமக மக்கள் பிரச்னைகளை முன்வைத்து, தீர்வு காணும் வகையில் செயல்படுகிறது.
திமுக கூட்டணி முரண்பாடுகள் கொண்ட கூட்டணியாகும். அதிமுக கூட்டணி கொள்கை ரீதியிலான கூட்டணி. எனவே, கூட்டணியின் வெற்றிக்கு அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என்றார் அவர். வேட்பாளர் இரா.கோவிந்தசாமி பேசுகையில், "எந்த நிலையிலும் மக்களிடம் விசுவாசமாக இருப்பதுடன் தொகுதி வளர்ச்சிக்காகவும் பாடுபடுவேன்' என்றார்.
கூட்டத்தில் அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...