நெய்வேலி, பண்ருட்டி பகுதிகளில் பறக்கும் படையினர் வியாழக்கிழமை மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் பரிசுப் பொருள்கள், ரூ.54 ஆயிரம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி வியாழக்கிழமை நெய்வேலி ஸ்டோர் ரோடு அருகே நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்கு நிலைக் கண்காணிப்புக்குழு-1 எம்.பாலகிருஷ்ணன் (வட்டார வளர்ச்சி அலுவலர்) தலைமையிலான குழுவினர் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக வந்த குறிஞ்சிப்பாடி வட்டம், தையல்குணம்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவரது காரில் 6 கட்டுமங்களில் இருந்த ஸ்டவ்-24, குக்கர்-24, வானலி-24 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.75 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.
இதேபோல, பண்ருட்டி வட்டம், பாலூரை அடுத்த குயிலாப்பாளையம் அருகே பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி நிலைக் கண்காணிப்புக் குழு-1 டி.முருகன் (வட்டார வளர்ச்சி அலுவலர்) தலைமையிலான குழுவினர் வாகனத் தணிக்கை மேற்கொண்டதில், அந்த வழியாக பைக்கில் வந்த நெய்வேலி வட்டம் 9-ஐ சேர்ந்த ஷேக்தாவுத் என்பவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.54,050 பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப் பொருள்கள் மற்றும் பணத்தை பண்ருட்டி வட்டாட்சியர் கீதாவிடம் ஒப்படைத்தனர்.