கடலூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட காவலர்களுக்கு மாவட்ட எஸ்பி பாராட்டுச் சான்றுகளை வழங்கினார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம் மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. தேர்தல் பணியில் காவல் துறையினர் மற்றும் அவர்களுடன் இணைந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதில், பதற்றம் நிறைந்ததாகக் கண்டறியப்பட்ட 167 வாக்கு சாவடிகள் மற்றும் பிரச்னை ஏற்படக்கூடிய இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 380 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், 5 பேர் குண்டர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு காவல் துறையினரின் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளால் மாவட்டத்தில் வன்முறையின்றி அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதற்கு உறுதுணையாக இருந்த கடலூர் மாவட்ட தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் மற்றும் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் செவ்வாய்க்கிழமை தனது அலுவலகத்தில் அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து செவ்வாய்க்கிழமை பணிஒய்வு பெற்றவர்களையும் காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.