புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் 100 டிகிரி வெயில் பதிவானது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் தீவிரப் புயலாக வலுடைந்துள்ளது. இந்தப் புயல் வருகிற 3 -ஆம் தேதி ஒடிஸா மாநிலத்தில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டு, 5 -ஆவது நாளாகத் தொடர்ந்தது.
கடலூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வானம் மேக மூட்டத்துடனே காணப்பட்டாலும், வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
கடலூரில் செவ்வாய்க்கிழமை 104 டிகிரி வெயில் பதிவான நிலையில், புதன்கிழமை 102.2 டிகிரி வெயில் பதிவானது.
கோடை காலம் தொடங்கிய நிலையில் முதல் முறையாக 100 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது. சில நேரங்களில் வெப்ப காற்று வீசியது. இதனால், வித்தியாசமான கால நிலையை உணர முடிந்தது.