கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 20 ஆசிரியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் அடிப்படையில், மத்திய அரசின் அதிகாரம் பெற்ற கல்வி அமைப்பால் நிர்ணயம் செய்யப்படும் குறைந்தபட்ச தகுதிகளை பெற்றுள்ள நபர் மட்டுமே ஆசிரியராக நியமனம் செய்யப்பட தகுதி பெற்றவர். அதில், மாநில அரசால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டுமென கடந்த 2010-ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது.
இதன்படி, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இந்தத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் தற்போது ஆசிரியர்களாக பாடம் நடத்திக் கொண்டிருப்பவர்கள் 5 ஆண்டுகளுக்குள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த அறிக்கையை எதிர்த்து சில ஆசிரியர்கள் நீதிமன்றம் சென்றனர். இந்த நிலையில், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டித்தது. எனினும், தமிழகத்தில் 1,500 ஆசிரியர்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனையடுத்து, அவர்களுக்கான ஏப்ரல் மாதத்துக்கான ஊதியத்தை பிடித்தம் செய்திட பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் 20 ஆசிரியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.