தமிழ்நாடு குடியரசு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அம்பேத்கரின் 128-ஆவது பிறந்த நாள் விழா, தொழிலாளர் தின விழா மற்றும் ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்காக மங்கலம்பேட்டை பேரூராட்சிக்கு 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய பி.தாமோதரனுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.
விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவரும், அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய மாவட்ட கண்காணிப்புக் குழு உறுப்பினருமான கே.மங்காபிள்ளை தலைமை வகித்தார். ஏ.கதிர்காமன், ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், இந்திய குடியரசு கட்சியின் மாநில பொருளாளர் கே.நாகராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருத்தாசலம் ஒன்றிய செயலர் சுப்புஜோதி, தலைமை ஆசிரியர் (ஓய்வு) எம்.அப்துல்பாரி, திமுக நகரச் செயலர் சி.செல்வம், அதிமுக நகரச் செயலர் ஏ.நூர்முகம்மது, பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் குழந்தை.சுதந்திரன், விசிக நகர செயலர் அம்பேத்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக் குழு நிர்வாகி குமரகுரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, இந்திய குடியரசு கட்சியின் நகரச் செயலர் பி.ராமானுஜம் வரவேற்க, கட்சியின் மாவட்ட பொருளாளர் ஏ.கணேசன் நன்றி கூறினார்.