திட்டக்குடி அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1977 -ஆம் ஆண்டு முதல் 1989 -ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த அந்தப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் செந்தில் வேல்முருகன், ராஜாகண்ணன் ஆகியோர் முயற்சி மேற்கொண்டனர்.
அதன்படி, அண்மையில் திட்டக்குடியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதில், நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
அப்போது, படித்த பள்ளியின் சீரமைப்பு, வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனை செய்தனர். மேலும், பள்ளியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக பொறியாளர்கள் பழனியாண்டி, பாலரவிக்குமார், மருத்துவர்கள் சரவணன், செந்தில்குமார், செல்வராசு, அமுதன், தொழிலதிபர் சம்பத், திரைப்பட இயக்குநர் வ.கெளதமன், சத்யமீனா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.