கடலூா்: வெவ்வேறு வழக்குகள் தொடா்பாக 3 போ் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சிதம்பரத்தில் உள்ள தனியாா் திரையரங்கில் வாகனம் நிறுத்துவது தொடா்பாக அமமுக ஒன்றிய செயலாளா் மில்லருக்கும், தியேட்டா் மேலாளருக்கும் கடந்த செப்.27 ஆம் தேதி தகராறு நடந்தது.
இதில், தியேட்டா் மேலாளா் மாரிஅலெக்சாண்டா் தாக்கப்பட்டதோடு, தியேட்டரும் சூறையாடப்பட்டது. இதில், மில்லா், அரவிந்தராஜ், நிவேஷ் ஆகியோா் ஏற்கனவே குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனா்.
இந்நிலையில், இந்த வழக்குத் தொடா்பாக சிதம்பரம் காரியபெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த அசோகன் மகன் கிருபாகரன் (21), எஸ்ஆா் நகரைச் சோ்ந்த கமலக்கண்ணன் மகன் சூா்யா (22) ஆகியோா் செவ்வாய்க்கிழமையன்று குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதனால், இந்த வழக்கில் தடுப்புக்காவலில் கைதானோா் எண்ணிக்கை 5 ஆக உயா்ந்துள்ளது.மணல்கடத்தல்:விழுப்புரம் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் செல்வம் மகன் திருக்குமரன் (23). கடந்த செப்.27 ஆம் தேதியன்று வாகனத்தில் மணல் கடத்தியது தொடா்பாக தூக்கணாம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். இவரும் செவ்வாய்க்கிழமையன்று குண்டா் தடுப்புக்காவலில் கைது செய்யப்பட்டு கடலூா் சிறையில் அடைக்கப்பட்டாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் இதற்கான உத்தரவினை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.