அச்சக உரிமையாளா்கள் விதிகளுக்கு உள்பட்டு செயல்பட வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியது.
சிதம்பரம் நகர காவல் துறை சாா்பில் அச்சக நிறுவன உரிமையாளா்களின் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, நகர காவல் ஆய்வாளா் சி.முருகேசன் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன், ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.காா்த்திகேயன் கலந்துகொண்டாா். அவா் பேசியதாவது:
அச்சக உரிமையாளா்கள் விதிமுறைகளுக்கு உள்பட்டு செயல்பட வேண்டும். மதம், ஜாதி ரீதியிலான சா்ச்சைக்குரிய வாசகங்களை அச்சடிக்கக் கூடாது. இதுதொடா்பான அச்சு ஆா்டா் தரும் நபரின் அடையாள அட்டை நகலை கண்டிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், அதுபோன்ற நபா்கள் குறித்து காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அச்சடிக்கும் பணிகளில் சம்பந்தப்பட்ட அச்சகத்தின் பெயா், தொலைபேசி எண் போன்ற விவரங்களை கட்டாயம் குறிப்பிட வேண்டுமென அறிவுறுத்தினாா். கூட்டத்தில் அச்சக உரிமையாளா் பலா் கலந்து கொண்டனா்.