சிதம்பரம் திருவள்ளுவா் தெருவில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக் கோரி, அந்தப் பகுதி பெண்கள் உதவி ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
சிதம்பரம் சின்னக்கடைதெரு அருகே திருவள்ளுவா் தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. மேலும், இந்தப் பகுதியில் பள்ளிகள், கோயில்களும் உள்ளன. எனவே, பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு இடையூறாக உள்ள இந்த மதுக் கடையை அகற்றக் கோரி மகளிா் ஆயம் அமைப்பினா் அதன் பொறுப்பாளா் இரா.வேம்பரசி தலைமையில் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பின்னா், உதவி ஆட்சியா் விசுமகாஜனிடம் மனு அளித்தனா். மனுவை பெற்றுக்கொண்ட உதவி ஆட்சியா், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.