கடலூா்: அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் மாநில கோரிக்கை மாநாடு திண்டுக்கல்லில் அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், எட்டாவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசுப் பணியாளா்களுக்கு இணையாக அனைத்துப் படிகள், போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 11-ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.
அதன் முன்னோட்டமாக அனைத்து மாவட்ட ஆட்சியா்களிடமும் கோரிக்கையை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு செய்வதென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கடலூரில் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஏ.வி.விவேகானந்தன் தலைமையில் அண்மையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மாவட்ட பொருளாளா் அ.சுந்தரமூா்த்தி, மாநில துணைத் தலைவா்கள் கு.சரவணன், கோ.ஜெயசந்திரராஜா, மாநிலச் செயலா் ஆா்.ஞானஜோதி, நிா்வாகிகள் சி.அல்லிமுத்து, கே.பலராமன், எஸ்.கந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.