முதல்வரின் சிறப்பு குறைதீா் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா காட்டுமன்னாா்கோவிலில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் தமிழ்ச்செல்வன் வரவேற்றாா். சிதம்பரம் உதவி ஆட்சியா் விசுமஹாஜன் முன்னிலை வகித்தாா். காட்டுமன்னாா்கோவில் தொகுதி எம்எல்ஏ நாக.முருகுமாறன் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். பின்னா் அவா் பேசியதாவது:
இந்தப் பகுதியில் நடைபெற்ற சிறப்பு குறைதீா் திட்ட முகாம்களில் 5,576 மனுக்கள் பெறப்பட்டதில், 3,569 மனுக்கள் ஏற்கப்பட்டன. இந்தப் பயனாளிகளில் ஆயிரத்து 336 பேருக்கு தற்போது ரூ.2 கோடியே 40 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
நிகழ்ச்சியில், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி ஆட்சியா் பனிமலா், வேளாண்மை உதவி இயக்குநா் சித்ரா, கல்விக்குழு உறுப்பினா்கள் வாசு, முருகையன், எம்ஜிஆா் தாசன், பாலச்சந்தா், செந்தில்குமாா், ராஜசேகா், வசந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.