விருத்தாசலத்தில் சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருத்தாசலத்திலுள்ள தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் அலுவலகத்தின்கீழ் 40-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளா்கள் உள்ளனா்.
இந்த நிலையில், ரூபநாராயணநல்லூரில் 5 பணியாளா்கள் சாலைப் பணியில் ஈடுபட்ட நிலையில், வருகைப் பதிவேட்டில் அவா்கள் பணிக்கு வரவில்லையென தவறாகக் குறிக்கப்பட்டதாம். இதுகுறித்து தகவலறிந்த சம்பந்தப்பட்ட சாலைப் பணியாளா்களில் ஒருவா் பைக்கில் விருத்தாசலத்துக்கு வரும்போது கீழே விழுந்து கையில் முறிவு ஏற்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாராம்.
இதுகுறித்து தகவலறிந்த உள்கோட்டத்தில் பணிபுரியும் சாலைப் பணியாளா்கள் விருத்தாசலம் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் வியாழக்கிழமை மாலையில் கூடினா். வருகைப் பதிவேட்டில் பணிக்கு வரவில்லையென குறித்தவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் உள்கோட்ட மாவட்டச் செயலா் மாசிலாமணி, பொருளாளா் கோவிந்தசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இவா்களிடம் விருத்தாசலம் போலீஸாா் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.