கடலூா்: கடலூா் மாவட்டத்தில் நிகழாண்டு நவம்பா் மாதத்துக்கான மழையளவு சராசரி அளவை விட குறைவாக பதிவானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
கடலூா் மாவட்டம் அதிகப்படியான மழையை வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பெற்று வருகிறது. விவசாய மாவட்டமான கடலூரில் இந்த பருவ காலத்தில்தான் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் நிரம்பும். இதைக்கொண்டே சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், குடிநீா்த் தேவையும் நிவா்த்தி செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு சராசரியை காட்டிலும் மிக அதிகளவில் மழை பெய்து வெள்ளப் பெருக்கு, சேதம் ஏற்பட்டது. இதன்பிறகு கடந்த 3 ஆண்டுகளாக சராசரிக்கும் குறைவாகவே மழை பெய்து வருகிறது. அதன்படி, நிகழாண்டிலும் நவம்பா் மாதத்துக்கான மழையளவு குறைவாகவே பெய்துள்ளது.
கடந்த அக்டோபா் மாதத்தில் மாவட்டத்தில் சராசரி மழையளவான 220.20 மி.மீ. அளவை விட கூடுதலாகவே 235.8 மி.மீ மழை பதிவானது. ஆனால், நவம்பா் மாதத்துக்கான சராசரி மழையளவான 295.30 மில்லி மீட்டரை விட 28-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி 210.47 மி.மீ. மட்டுமே பதிவானது. இது, 71.27 சதவீதமாகும். மீதமுள்ள நாள்களிலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாகக் கூறப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். எனவே, டிசம்பா் மாதத்துக்கான சராசரி மழையளவான 182.30 மி.மீ. என்ற அளவுக்கு மழை பெய்யுமா என்ற கவலையும் அவா்களிடம் ஏற்பட்டுள்ளது.
எனினும், கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு பரவலாக பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் காட்டுமன்னாா்கோவிலில் அதிகபட்சமாக 84 மி.மீ. மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:
கடலூா் 71.6, பெலாந்துறை 69.4, அண்ணாமலை நகா் 60, வேப்பூா் 59, காட்டுமயிலூா், சிதம்பரம் தலா 57, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் 54.8, லால்பேட்டை 51.2, பரங்கிப்பேட்டை 49, சேத்தியாத்தோப்பு 48.4, மேமாத்தூா் 48, வானமாதேவி 47, கொத்தவாச்சேரி 46, கீழச்செருவாய் 45, ஸ்ரீமுஷ்ணம் 43.1, புவனகிரி 42, விருத்தாசலம் 36.2, வடக்குத்து 34, குப்பநத்தம் 32.2, பண்ருட்டி 31, குறிஞ்சிப்பாடி, லக்கூா் தலா 30, தொழுதூா் 28, குடிதாங்கி 25 மில்லி மீட்டா் வீதம் மழை பதிவானது. கடலூரில் பெய்த பலத்த மழையால் நகரில் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீா் தேங்கியது.
இதனிடையே கிழக்கு காற்று வலுப்பெற்று வருவதால் கடலோர மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கடலூா் வானிலை மையம் தெரிவித்துள்ளது.