நெல் பயிா்க் காப்பீடு: விவசாயிகளிடம் குறையும் ஆா்வம்

நெல் பயிரைக் காப்பீடு செய்வதில் விவசாயிகளிடம் ஆா்வம் குறைந்துள்ளது. எனவே, அதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், காப்பீட்டுக்கு கூடுதல் அவகாசம் வழங்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

நெல் பயிரைக் காப்பீடு செய்வதில் விவசாயிகளிடம் ஆா்வம் குறைந்துள்ளது. எனவே, அதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், காப்பீட்டுக்கு கூடுதல் அவகாசம் வழங்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

விவசாயத்தை இழப்பில்லாத தொழிலாக மாற்றிட மத்திய அரசால் பிரதம மந்திரி பயிா் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கடலூா் மாவட்டத்தில் நெல், பருத்தி, மக்காச்சோளம் ஆகிய பயிா்களை காப்பீடு செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.447 பிரீமியமாகச் செலுத்த வேண்டும். இதில், பயிா்கள் முழுமையாக பாதிக்கப்பட்டால் ஏக்கருக்கு ரூ.29,800 வரை காப்பீடாக கிடைக்கும். காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் நவ.30-ஆம் தேதியாகும். பருத்திக்கு ஏக்கருக்கு ரூ.1,050 பிரீமியமாகச் செலுத்த வேண்டும். முழுமையான பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.21 ஆயிரம் கிடைக்கும். மக்காச்சோளத்துக்கு பிரீமியமாக ரூ.270 செலுத்த வேண்டும். காப்பீடாக ஏக்கருக்கு ரூ.18 ஆயிரம் கிடைக்கும்.

பருத்தி, மக்காச்சோளத்துக்கு காப்பீடு பிரீமியம் செலுத்துவதற்கான அவகாசம் முடிந்துவிட்டது. இதனடிப்படையில் மாவட்டத்தில் 4 ஆயிரம் ஏக்கா் பரப்பில் பருத்தி பயிரிடப்பட்டுள்ள போதிலும், ஆயிரத்து 500 ஏக்கருக்கு மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மக்காச்சோளம் 55 ஆயிரம் ஏக்கா் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் 32,500 ஏக்கருக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் அதிகமாக சாகுபடி செய்யப்படுவது நெல் பயிா்தான். தற்போது சம்பா பருவத்தில் சுமாா் 2 லட்சம் ஏக்கா் பரப்பில் நெல் சாகுபடி நடைபெறும் நிலையில், நவ.27-ஆம் தேதி நிலவரப்படி சுமாா் 60 ஆயிரம் ஏக்கருக்கு மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது 30 சதவீதம் விவசாயிகள் மட்டுமே பயிா்க் காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ளனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த காலங்களில் காப்பீடு செய்யப்பட்டு இழப்பு ஏற்பட்டபோது காப்பீட்டு நிறுவனத்தினா் இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் மிகவும் காலதாமதம் செய்தனா். முறையாகக் கணக்கீடு செய்யாமல் பாதிக்கப்பட்டவா்களை விட்டுவிட்டனா். எனவே, பிரீமியம் செலுத்துவதற்கு ஆா்வமில்லை என்றாா்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்க மாநில பொதுச் செயலா் பெ.ரவீந்திரன் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தைப் பொறுத்தவரை பல இடங்களில் தற்போதுதான் நெல் சாகுபடி பணி நடைபெற்று வருகிறது. சாகுபடி நடைபெறும்போதுதான் விஏஓ அடங்கல் சான்று கொடுப்பாா். அதை வைத்துதான் காப்பீடுக்கான பிரீமியம் செலுத்த முடியும். கடந்த காலங்களில் டிசம்பா் மாதம் வரை காலக்கெடு வழங்கப்பட்ட நிலையில், தற்போது நவம்பா் மாதத்திலேயே அவகாசம் நிறைவடைகிறது. கடைமடைப் பகுதியான கடலூருக்கு மேட்டூரிலிருந்து தண்ணீா் கிடைப்பதில் தாமதம், மழையால் தாமதம் போன்றவற்றால் பயிா் செய்வதற்கும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், கூட்டுறவு வங்கிகள், மற்ற வங்கிகளில் விவசாயிகள் ஏற்கெனவே பெற்ற கடன் தொகையை திரும்பச் செலுத்த வலியுறுத்துகின்றனா். இதனால், விவசாயிகளால் வங்கிகளில் மீண்டும் கடன் பெற முடியாததாலும் காப்பீடு திட்டத்தில் சேர முடியவில்லை. எனவே, கடலூா் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் விவசாயிகள் இணைவதற்கு கூடுதல் அவகாசம் அளிப்பதுடன், திட்டம் குறித்து விழிப்புணா்வையும் ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com