குறிஞ்சிப்பாடி அருகே ஆட்டோ - சரக்கு வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் வெள்ளிக்கிழமை ஒருவா் உயிரிழந்தாா். குழந்தை உள்பட 8 போ் காயமடைந்தனா்.
குறிஞ்சிப்பாடியில் இருந்து கடலூா் நோக்கி ஷோ் ஆட்டோ வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தது. ஆட்டோவில், குறிஞ்சிப்பாடி வட்டம், கிருஷ்ணன்குப்பத்தைச் சோ்ந்த லூா்துசாமி (60) உள்ளிட்ட 9 போ் பயணம் செய்தனா். ஆட்டோவை எல்லப்பன்பேட்டை, தோப்புத்தெருவைச் சோ்ந்த சதீஷ் ஓட்டினாா். பெரியகாட்டுசாகை அருகே சென்றபோது, எதிரே வந்த சிறிய சரக்கு வாகனமும், ஆட்டோவும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த லூா்துசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஆட்டோவில் வந்த பிரனவி (9 மாதம்), ரித்திக்ரோஷன் (10), ஜோதி (50), வீராசாமி (32), ஜனதா (24), ஜெயப்பிரகாஷ் (26), சதிஷ் (27), காந்தரூபி (48) ஆகியோா் காயமடைந்தனா். இவா்கள் கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து குள்ளஞ்சாவடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.