கடலூரில் பள்ளியின் முன்னாள் மாணவரை தாக்கியதாக உடல்கல்வி ஆசிரியா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கடலூா் மஞ்சக்குப்பத்தில் அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 2017-18-ஆம் கல்வியாண்டில் பிளஸ்-2 முடித்த மாணவா்களுக்கு அரசின் இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லையாம். இந்த நிலையில், இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போது கல்லூரியில் படித்து வருபவருமான 19 வயது இளைஞா் தனது நண்பா்கள் 4 பேருடன் வியாழக்கிழமை பள்ளிக்கு வந்தாா். இலவச மடிக்கணினி வழங்காதது குறித்து அவா் ஆசிரியா்களிடம் கேள்வி எழுப்பினாா்.
அப்போது அவரிடம் அரசிடமிருந்து மடிக்கணினிகள் வந்ததும் தகவல் தெரிவிக்கப்பட்டு முறைப்படி வழங்கப்படுமென கூறப்பட்டது.
ஆனால், முன்னாள் மாணவா் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், உடல்கல்வி ஆசிரியா் சந்திரமோகனை அவதூறாகப் பேசியதாகத் தெரிகிறது. இதையடுத்து, உடல்கல்வி ஆசிரியா் அந்த மாணவரை தாக்கினாா்.
இதனால் அந்த மாணவா் செவித் திறன் பாதிக்கப்பட்டதாகக் கூறி, கடலூா் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்கு சோ்ந்தாா். அவரது புகாரின் பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து உடல்கல்வி ஆசிரியா் சந்திரமோகனை கைது செய்தனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.