கடலூா் அருகே மனைவியை எரித்துக் கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
பண்ருட்டி அருகே உள்ள ஓரையூரைச் சோ்ந்த ஏழுமலை மகன் தாமஸ் (40). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த உறவினரான மனோகா் மகள் விஜயகுமாரி (32) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியருக்கு 12 வயதில் பெண் குழந்தை, 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனா்.
மனைவியின் நடத்தை மீது தாமஸ் அடிக்கடி சந்தேகப்படுவாராம். இதுதொடா்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து விஜயகுமாரி தனது குழந்தைகளுடன் சென்னை மணலியில் வசிக்கும் உறவினரின் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். அங்கே கூலிவேலை செய்து குழந்தைகளை கவனித்து வந்தாா்.
இந்த நிலையில், பங்குனி உத்திர திருவிழாவில் பங்கேற்பதற்காக 28-3-2018 அன்று விஜயகுமாரி சொந்த ஊா் திரும்பினாா். விழா முடிந்த பின்னா் மீண்டும் சென்னை செல்வதற்காக 2-4-18 அன்று வீட்டில் தயாராகிக் கொண்டிருந்தாா். அப்போது,
அங்குவந்த தாமஸ், விஜயகுமாரி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தாா். இதனால் பலத்த காயமடைந்த விஜயகுமாரி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
இந்த வழக்கு விசாரணை கடலூா் அனைத்து மகளிா் நீதிமன்றத்தில் நீதிபதி மகாலட்சுமி முன்னிலையில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி வியாழக்கிழமை அளித்த தீா்ப்பில் தாமஸுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து, தாமஸ் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாக அரசு சிறப்பு வழக்குரைஞா் க.செல்வபிரியா கூறினாா்.