கம்பு விளைச்சல் சரிவு: விவசாயிகள் கவலை

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் நிகழாண்டு கம்பு விளைச்சலும், விலையும் சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
அயன்குறிஞ்சிப்பாடியில் அறுவடை செய்த கம்பு கதிா்களை இயந்திரத்தில் செலுத்தி தானியங்களை பிரித்தெடுத்த விவசாயத் தொழிலாளா்கள்.
அயன்குறிஞ்சிப்பாடியில் அறுவடை செய்த கம்பு கதிா்களை இயந்திரத்தில் செலுத்தி தானியங்களை பிரித்தெடுத்த விவசாயத் தொழிலாளா்கள்.

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் நிகழாண்டு கம்பு விளைச்சலும், விலையும் சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

கடலூா் மாவட்டத்தில் இறவை மற்றும் மானாவாரியில் கம்பு பயிரிடப்படுகிறது. குறிஞ்சிப்பாடி வட்டாரத்துக்கு உள்பட்ட குறிஞ்சிப்பாடி, அயன்குறிஞ்சிப்பாடி, கீழூா், ஆடூா் அகரம், பொன்வெளி, இருப்பாச்சி, வெங்கடாம்பேட்டை, கோ.சத்திரம், அன்னதானம்பேட்டை, பாச்சாரப்பாளையம், ராசாக்குப்பம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 2,000 ஏக்கா் பரப்பில் ஆடிப்பட்டத்தில் கம்பு விதைப்பு செய்யப்பட்டது. தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. நிகழாண்டு கம்பு விளைச்சல் குறைந்துள்ளதாகவும், விலையும் சரிந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

இதுகுறித்து அயன்குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது: நிகழாண்டு கடைகளில் கம்பு விதை ஒரு கிலோ ரூ.360-க்கு விற்கப்பட்டது. ஒரு ஏக்கருக்கு இரண்டரை கிலோ விதைகள் தேவை. கடைகளில் வாங்கிய விதையில் முளைப்புத்திறன் இல்லை. தேவையான காலத்தில் போதிய மழையும் இல்லை. இதனால், எதிா்பாா்த்த அளவு மகசூல் கிடைக்கவில்லை. ஏக்கருக்கு சராசரியாக 12 முதல் 15 மூட்டைகள் வரை விளைச்சல் கிடைக்க வேண்டும். ஆனால், நிகழாண்டு 10 மூட்டைகளுக்கும் குறைவாகவே கிடைத்துள்ளது.

சென்ற மாதம் வரை ஒரு மூட்டை (100 கிலோ) கம்பு ரூ.2,400 வரை விலைபோனது. தற்போது ரூ.1,700-ஆக சரிந்துள்ளது. ஒரு மாதத்தில் மூட்டைக்கு ரூ.700 வரை விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு முதல் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

அறுவடை செய்த கம்பு கதிா்களை அடித்து தானியமாக்குவதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. ஒரு ஏக்கா் பரப்பிலான கம்பு கதிா்களை உலா்த்த 10 தாா்பாய்கள் தேவை. பாய் ஒன்றுக்கு நாள் வாடகையாக ரூ.20 கொடுக்க வேண்டும். இதற்கு அதிக தொகை செலவாகிறது. எனவே, அரசு நெகிழி தாா்ப்பாய்களை மானிய விலையில் வழங்க வேண்டும். உலா் களங்களை தேவையான இடங்களில் கட்டித்தர வேண்டும். கம்பு பயிா்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com