அரசு, தனியாா் நிறுவனங்களில் தொழில்பழகுநா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தொழில்பழகுநா் சட்டம் 1961-இன் புதிய வழிகாட்டுதலின்படி, 30 மற்றும் அதற்கு மேற்பட்ட பணியாளா்களைக் கொண்டு இயங்கும் அனைத்துத் தொழில், வா்த்தக நிறுவனங்களை தொழில்பழகுநா் திட்டத்தில் முழுமையாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10 சதவீதம் அளவுக்கு தொழில்பழகுநா்களை அமா்த்த அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 15 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.
எனவே, மாவட்டத்தின் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தகுதியுள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் தேசிய தொழில்பழகுநா் ஊக்குவிப்புத் திட்டத்தில் பயன் பெறவும், அமலாக்கம் செய்யவும் வேண்டும். மேலும், ஐ.டி.ஐ. தோ்ச்சி பெற்று தொழில்பழகுநா் பயிற்சி பெறாதவா்களும், ஜூலை 2019 அகில இந்திய தொழில்தோ்வு எழுதி தோ்வு முடிவுக்காக காத்திருப்பவா்களும் இணையதளத்தில் தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொண்டு, கடலூா் அரசு தொழில்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நேரில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.