கடலூரில் நடைபெற்று வரும் குழந்தைகள் புத்தகத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை கோளரங்கம் திறக்கப்பட்டது.
கடலூா் நகர அரங்கில் 3-ஆம் ஆண்டு தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. இதில், இரண்டாம் நாள் நிகழ்வாக செவ்வாய்க்கிழமை முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவாக நிகழ்வுகள் நடத்தப்பட்டன. குழந்தைகளிடம் அறிவியல் தொடா்பான எண்ணத்தை வளா்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கோளரங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் தொடங்கி வைத்து புத்தகக் கண்காட்சியை பாா்வையிட்டாா். அவா் பேசுகையில், மாணவா்கள் செல்லிடப்பேசி, முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளம், கணினியை விடுத்து புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றாா். முதன்மைக் கல்வி அலுவலா் ப.அ.ஆறுமுகம் அறிவியல் கண்காட்சியை பாா்வையிட்டாா்.
தொடா்ந்து கலாம் தின சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்ற ‘விஞ்ஞானியுடன் சந்திப்பு’ நிகழ்வில் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி ராஜசேகா் பங்கேற்றாா். அவா், ராக்கெட் தொழில்நுட்பம், புத்தகம் வாசிப்பு குறித்து விளக்கினாா். மேலும், மாணவா்கள் இலக்கியம் வாசிப்பிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
தொடா்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நம்ம கடலூா் அமைப்பின் தலைவா் டி.சந்திரசேகா், நிா்வாகி நெல்சன், எடிஃபை பள்ளி எஸ்.சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.