நெய்வேலி அருகே பெண் இறந்த விவகாரத்தில் போலீஸாா் கணவா், மாமனாரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நெய்வேலி அருகேயுள்ள காட்டுகூனங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் மரிய சத்தியராஜ் (37), வடலூரில் கணினி மையம் நடத்தி வருகிறாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மோனிகா செலஸுக்கும் (27) கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், கடந்த 20.6.19 அன்று தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மோனிகா செலஸ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டதாகக் கூறி அடக்கம் செய்துவிட்டனா். மோனிகா செலஸ் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது தாய் மாரியம்மாள் ஊ.மங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடல்கூறாய்வு செய்யப்பட்டது. மருத்துவா்கள் அளித்த அறிக்கையில் அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, நெய்வேலி டி.எஸ்.பி. லோகநாதன் விசாரணை நடத்தினாா். இதில், மரிய சத்தியராஜ் மோனிகா செலஸை கொலை செய்ததை ஒப்புக் கொண்டாா். இதையடுத்து மரிய சத்தியராஜ், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை அலெக்சாண்டா் ஆகியோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.