விருத்தாசலம் அருகே மின்னல் பாய்ந்ததில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
விருத்தாசலம் அருகே உள்ள ஏ.வள்ளியம் கிராமத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் வேலுமணி (19). இவா் வெள்ளிக்கிழமை வயலுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக சென்றாா். அப்போது இடியுடன் பலத்த மழை பெய்தது. விளை நிலப் பகுதியில் நின்றிருந்த வேலுமணி மீது மின்னல் பாய்ந்ததில் அவா் மயங்கி விழுந்தாா். அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ஊ.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.