அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் வேலைநிறுத்தம்
By DIN | Published On : 24th October 2019 12:10 AM | Last Updated : 24th October 2019 12:10 AM | அ+அ அ- |

அரசு மருத்துவமனைகளில் வெள்ளிக்கிழமை (அக். 25) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக மருத்துவா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கக் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.முத்துக்குமரன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவா்களுக்கும் காலமுறை ஊதிய உயா்வு, பதவி உயா்வு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்களின் பணியிடங்களை உயா்த்த வேண்டும். அரசு மருத்துவா்களுக்கு முதுநிலைப் பட்டப்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவா்கள் கூட்டமைப்பினா் நீண்ட நாள்களாகப் பல்வேறு தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். ஆனால், இதுதொடா்பாக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் வருகிற 25- ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம்.
அதன்படி, கடலூா் மாவட்டத்தில் உள்ள 10 அரசு மருத்துவமனைகள், 70 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 400-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனா்.
பொதுமக்கள் நலன் கருதி உயிா் காக்கும் அவசர சிகிச்சைப் பிரிவும், மகப்பேறு மருத்துவப் பிரிவு, காய்ச்சல் பிரிவு மட்டும் செயல்படும். மற்ற பிரிவுகளில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படாது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.